நிச்சியதார்த்தம் வாழ்த்து கவிதை|marriage engagement wishes in tamil|Nynarin Unarvugal

நிச்சியதார்த்தம் என்பது
ஒரு விழா மட்டுமல்ல..
இணையப்போகும் ஜோடிகளின்
காதலை தொடங்கி வைக்க
உறவுகள் சூழ
பெற்றவர்கள் காட்டும்
பச்சைக்கொடி.

என்ன பிடிக்கும்
என்ன பிடிக்காது என்று
ஒருவருக்கொருவர்
அறிந்துகொள்ள..
புரிதலுக்கு வரவேற்புரை
நிகழ்த்தும் நாள்.

இல்லறம் இனிக்க
விட்டுக் கொடுப்பதற்கும்
கட்டுப்படுவதற்கும்
பயிற்சி எடுக்க..
முயற்சி தொடுக்க..
காலம் வழங்கும் அழகிய தருணம்.

உறவுகளை அறிந்துகொள்ளவும்
உணர்வுகளை புரிந்துகொள்ளவும்
உங்கள் கனவுகளுக்கு
வண்ணமடிக்கவும்
உங்கள் விருப்பங்களுக்கு
ஒப்பனை செய்யவும்
இறைவனை முன்நிறுத்தி
நாளையை திட்டமிடவும்
கிடைத்திருக்கும்
அற்புத அவகாசம்.

காதலித்து திருமணம் புரிய
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
இதோ உங்களுக்கு
வாய்த்திருக்கிறது..
ஒரு நல்ல துவக்கமாக
நேர்மறை எண்ணங்களோடு
அழகிய புரிதலை வளர்க்க
பண்பை ஊட்டி பாசத்தை காட்ட
அன்பை வழங்கி ஆசையை பெற
இனிதே தொடங்கும்
இந்நாளில்..
இறைவன் கருணையோடு
இனிய மணமக்களாய்
இனி மாறவும்..
உங்களை பெற்றவர்களுக்கு
பெருமை சேரவும்..
ஊரும்..உறவும்..வாழ்த்த
பெரு வாழ்வு மலர..
நெஞ்சார வாழ்த்துகிறேன்
இறை நம்பிக்கையோடு
நீங்கள் நம்பிக்கையை
பகிர்ந்து கொள்ளுங்கள்
பறிமாறிக் கொள்ளுங்கள்
இனி நிச்சயமென்பது
உறுதிமொழிகளாக அல்லாமல்
உங்கள் உணர்வுகளோடு
ஒன்றியதாக இருக்கட்டும்.
என் இனிய வாழ்த்துக்கள்.

நயினாரின் உணர்வுகள்

Post a Comment

Previous Post Next Post