ஆன்மீகவாதியென்றாலும்
இடது காலை வைத்தே
உள்ளே நுழைவார்.
எத்தனை பெரிய
மனிதரென்றாலும்
அவருக்கு பின்னால்தான்
அமர முடியும்.
இவரின் புலன்கள்
அத்தனையும்
விழிப்புடன் இருக்கும்
அதற்கான பலன்கள்
பின்னாலே கதை
பேசி வரும்.
நேரத்துக்கு விலை
நேர்த்தியான கலை
நேர்மையான நிலை
என புகழாரம்
சூட்டலாம்
மயங்குவதில்லை
மனிதர்.
தடைகளையும்
வேகமாய்
மிதித்தே முன்னேறுபவர்
இவர்தான்.
எல்லோரும்
உயிர்களை இவரிடம்
ஒப்படைத்துவிட்டு
உறங்குவார்கள்
அவர் மட்டும்
உயிரை கையில்
பிடித்துக்கொண்டு
உறங்காத உணர்வுகளை
மிதித்து வருவார்.
விதிகளை
வீதியாக்குவது இவர்தான்.
அவரவர்களின்
பயணச்செலவு தான்
இவரின் வாழ்க்கை
பயணத்திற்கே
வழி செய்கிறது.
பாதுகாப்பை உறுதி
செய்த நன்றிக்கு
ஒரு புன்னகையை
பரிசளித்தாலென்ன
என்பது அவரின்
நீண்ட நாள் கேள்வி.
ஓட்டுனர்.
⭐⭐⭐⭐